2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் தலைமை வரை பெரும் மாற்றத்திற்கான விவாதங்கள் அறிவாலயத்தில் வெடித்துள்ளன. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
களத்தில் 14 தொகுதிகளில் சுமார் 10,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த 3,000 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட அறிக்கை, திமுக தலைமைக்கு ஒரு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ ஆக அமைந்துள்ளது.
இந்த அதிரடி அறிக்கையில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான ஹைலைட், “தலைவரே! இனி நமக்கு எந்தக் கூட்டணியும் வேண்டாம். தனித்தே போட்டியிடுவோம்” என்பதுதான் கீழ்மட்டத் தொண்டர்களின் ஒற்றைக் குரலாக ஒலித்துள்ளது. தேர்தல் களத்தில் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பின்மைதான் தோல்விக்கு முக்கியக் காரணம் எனத் தொண்டர்கள் பகிரங்கமாகப் பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர்கள்- மா.செ-க்கள் மீது குமுறல்
தேர்தல் களத்தில் உழைத்த தொண்டர்கள் முன்வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டு அமைச்சர்களின் மோசமான அணுகுமுறைதான். அதிகாரம் தலைக்கேறியதால் தங்களை அமைச்சர்கள் மதிக்கவில்லை என்றும், ஒரு அமைச்சரைச் சந்திக்க உதவியாளர்களின் கவசப் படையைத் தாண்டிச் செல்வது முடியாத காரியமாக இருந்தது என்றும் குமறியுள்ளனர்.
அறங்காவலர் குழு நியமனங்களில், கட்சிக்காக உழைத்த விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டு, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குப் பதவிகள் தாரை வார்க்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபுவின் துறை மீது அதிருப்தி எழுந்துள்ளது. மகளிரிடம் விஜய்க்குப் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று நாங்கள் அப்போதே எச்சரித்தோம். ஆனால் மாவட்டப் பொறுப்பாளர்கள் அதையெல்லாம் அலட்சியப்படுத்தினர்” எனத் தொண்டர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளனர்.
ஆட்டம் காணும் சீனியர்களின் நாற்காலிகள்
தற்போதுள்ள 78 மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100-க்கும் மேலாக அதிகரிக்கத் தலைமை முடிவு செய்துள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்த, தொண்டர்களோடு தொடர்பில்லாத பல சீனியர் மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படவுள்ளன. பழைய முகங்களை ஓரம் கட்டிவிட்டு, உண்மையாக உழைக்கும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் புதிய டிஜிட்டல் யுக்திகளுடன் மகுடம் சூட்ட ஸ்டாலின் ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
மாபெரும் அறுவை சிகிச்சை
மீதமுள்ள 13 அணிகளின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, வரும் ஜூலை இறுதிக்குள் திமுகவில் ஒரு மெகா உட்கட்சி அறுவை சிகிச்சை அரங்கேறும் என்பது உறுதியாகியுள்ளது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, கட்சித் தலைமை எடுக்கத் துணிந்துள்ள இந்த அதிரடி மாற்றங்கள் திமுகவை மீண்டும் பழையபடி ‘ஃபுல் ஃபார்முக்கு’ கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
