தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், “இயக்குனர் இமயம்” எனப் போற்றப்படுபவருமான பாரதிராஜா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு 84 வயது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பாரதிராஜா அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், அவரது மகன் மனோஜின் மறைவுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குப் பிறகு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவின் இல்லத்திற்கு அருகிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று அதிகாலை நேரில்சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது.
காலை 8.33 மணியளவில் அவரது இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், சுமார் நான்கு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியதுடன், தனது இரங்கலையும் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி பயணத்திற்கு தயாராக இருந்த நிலையிலும், முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாரதிராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது சென்னையிலேயே அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுமா என்பது குறித்து குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்க்கையையும், இயல்பான மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
