சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL / TNEB) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு தற்போது சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டு அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.397 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் மற்றும் மின்சாரத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு, விசாரணையின் தீவிரத்தன்மை மற்றும் பின்னணி காரணிகளை கருத்தில் கொண்டு தற்போது சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்தின் டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல் மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதற்கட்டமாக அரக்கோணத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை வாங்கியதாக பெங்களூருவைச் சேர்ந்த முரளி மனோகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தவறியதாக மின்சார வாரியத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ரூ.397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அதே நேரத்தில், இந்த ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதால், இது ஆதாரங்களை அழிக்கும் திட்டமிட்ட சதியா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
