கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமத்தில், மாடுகளை மேய்க்க சென்றிருந்த 80 வயது மூதாட்டி மீது மதியம் சுமார் 3 மணியளவில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த இரத்தப்போக்குடன் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு, எட்டு தையல்கள் போடப்பட்டன. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி வழங்கிய அடையாளங்களின் அடிப்படையில், மாலை 5.30 மணியளவில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர் கல்லாவி போயர் தெருவை சேர்ந்த 25 வயதுடைய சஞ்சீவ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சீவ் விரைவில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
