முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் உறுதியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், முதுமையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது இறுதி மூச்சு வரை தமிழ் இனத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்விற்காகவும் ஓய்வின்றி உழைத்த உன்னத தலைவர் கலைஞர் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், “தொடர் வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். தற்போது மீண்டும் வெற்றி வாய்ப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். உறுதியாய்ச் சொல்கிறோம்; மீண்டும் வெற்றிச் சரித்திரத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலேயே இந்தப் பதிவு அமைந்துள்ளது.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் இந்த நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் என்றும், பல வெற்றிகளையும் , சவால்களையும் கடந்து வந்த இயக்கமாக திமுக தொடர்ந்து மக்கள் நலனுக்காக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்
