சமீபத்தில் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தாய்மாமன் சீர் வரிசைகளை வழங்கினார். தூத்துக்குடி, நெல்லை போன்ற தென் மாவட்டப் பண்பாட்டில் தாய்மாமன் சீர் என்பது வெறும் குடும்ப நிகழ்வு மட்டுமல்ல; அது உறவையும், இணக்கத்தையும் பலப்படுத்தும் ஒரு பெரும் குறியீடு. சீமான் எப்போதுமே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து அரசியல் செய்து வருபவர் என்ற சூழலில், திமுக அமைச்சர் ஒருவர் இப்படி நேரில் சென்று சீர் கொடுத்திருப்பது வெறும் குடும்ப விசேஷமாக மட்டும் பார்க்கப்படவில்லை.
இதன் பின்னணியில் ஒரு பலமான அரசியல் வியூகம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் வென்ற சில கட்சிகள் ஆதரவளித்துள்ளன. காங்கிரஸ், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் தவெக பக்கம் சென்றுள்ளதால் திமுக தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அரசியல் சமநிலைப் பாதிப்பைச் சரிக்கட்ட, திமுக ஒரு மாற்று வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது. நாதகவின் கணிசமான வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்க திமுக நாதகவை நோக்கி நட்புக் கரங்களை நீட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதற்கு ஏற்ப, இந்த ‘தாய்மாமன் சீர்’ நிகழ்வு, வரும் தேர்தலில் திமுக-நாதக இடையே ஒரு புதிய அரசியல் இணக்கத்திற்கான மறைமுக அழைப்பாகவோ அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான தொடக்கமாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், சீமான் இதற்கு ஒப்புக் கொள்வாரா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது
