தவெக தலைவர், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய அரசியல் நகர்வுகள், தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இடதுசாரிகள் மத்தியில் பெரும் புகைச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாசிச எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு எனப் மேடைகளில் முழங்கினாலும், நிஜத்தில் தவெக தலைமை பாஜக மீது ஒருவித மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்கிறதோ என்கிற பலத்த சந்தேகம் இடதுசாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் பிணராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனைகளுக்கு, திமுக உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உடனடியாகக் கடும் கண்டனக் குரல்களை எழுப்பின. ஆனால், தவெக அரசுக்குத் தூணாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிணராயி விஜயன் மீதான இந்த மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு, முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை கூடக் கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது தோழர்களைக் கடும் தர்மசங்கடத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மறுபுறம், டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய் அங்கே சோனியா காந்தியைச் சந்திக்க மறுத்ததும், இடதுசாரித் தலைவர்கள் தங்களைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தும் அவர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகச் சென்னை திரும்பியதும் தோழர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டுள்ளது.
“டெல்லியில் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்தால் எங்கே மோடி அமித்ஷா கோபித்துக் கொள்வார்களோ” என்று விஜய் பயப்படுகிறாரா? அல்லது தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி, திரைக்குப் பின்னால் பாஜகவுடன் ஒரு ரகசிய டீலிங்கில் தவெக இருக்கிறதா? என இடதுசாரி வட்டாரங்கள் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றன. மேடைக்கு மேடை கொள்கை பேசும் விஜய், டெல்லி விவகாரங்களிலும், தோழமை வெடி விவகாரங்களிலும் பாஜகவிற்குச் சாதகமாக ‘சாஃப்ட்’ காய் நகர்த்துவது தவெகவின் போலி முகத்தைக் காட்டுகிறது எனப் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
