ஜெயராம் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்த உடனே எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கிட்டத்தட்ட 25 முதல் 26 படங்கள் வரை சேர்ந்து நடித்துள்ளோம்.
பஞ்சதந்திரம் படத்திற்குப் பிறகு, புத்தம் புதுக் காலை என்ற ஆன்தாலஜி படத்தில் மட்டுமே மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கொரோனா காலத்தில், ஒரே ஒரு நாள்தான் இணைந்து நடித்தோம்.
அதற்குப் பிறகு பல கதைகள் எங்களிடம் வந்தன. சில கதைகள் எனக்கு பிடிக்கும், சில கதைகள் ஜெயராமுக்கு பிடிக்காது. இதுபோல நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்.
இந்தக் கதையை ஜெயராம் கூறியபோது, “நீங்கள் நடிக்கிறீர்களா?” என்று கேட்டார். பொதுவாக மக்கள் எங்களிடமிருந்து வித்தியாசமான கதைகளையும், முழுக்க சீரியஸான கதாபாத்திரங்களையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்த சீரியஸான கதைகளில் எங்களுக்கு பிடித்த அம்சங்கள் சில நேரங்களில் அமையாது.
இந்த ஸ்கிரிப்டை கேட்ட உடனே இயக்குநர் பாண்டியராஜ் மீது இருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. குறிப்பாக அவருக்குள் இருக்கும் எழுத்தாளரையே நான் அதிகமாக மதிக்கிறேன். ‘பசங்க’ படம் முதல் அவருடைய பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். திரைக்கதைக்காக அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்.
பொதுவாக மலையாள திரைப்படங்கள் குறைந்த நாட்களில் தரமான முறையில் உருவாகும் என்று சொல்வார்கள். ஆனால் சமீப காலத்தில் மலையாள படங்களை விட வேகமாக உருவான படம் இதுதான். சிங்கிள் ஷெட்யூலில் 45 முதல் 50 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பல நேரங்களில் என்னால் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காரணம், மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த சிரமங்களுக்கிடையிலும் எப்படியோ சமாளித்து இந்தப் படத்தில் நடித்தேன்.
