தெருநாய் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அதேவேளை, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற வளாகங்களிலிருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுவது குறித்து நவம்பர் 25 அன்று பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க மறுத்துவிட்டது.
தெருநாய்களைப் பிடித்த பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது, நாய் தாக்குதல்கள் குறித்த அச்சமின்றி வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது என்று வலியுறுத்திய நீதிமன்ற அமர்வு, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சர்வதேசப் பயணிகள் கூட நாய் கடி சம்பவங்களுக்குப் பலியாகும் “கடுமையான கள எதார்த்தங்களை” நீதிமன்றங்கள் கண்டும் காணாமல் இருக்க முடியாது என்று கூறியது.
பொதுமக்கள்—குறிப்பாகக் குழந்தைகள். முதியவர்கள், தங்களின் “உடல் வலிமை அல்லது தற்செயல் நிகழ்வுகளின்” கருணையை நம்பி உயிர்வாழும் ஒரு சமூகத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்மொழியவில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தெருநாய் வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தபோது, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஒரு முக்கியக் கருத்தாக, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிகள், மருத்துவமனைகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் பிற பொது இடங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து, அதிகாரிகள் “அறிவார்ந்த, தர்க்கரீதியான முடிவை” எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இந்த முடிவுகள் காலவரையறைக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
அதிகாரிகளின் நீண்டகாலச் செயலற்ற தன்மையே, இப்பிரச்சினை அச்சமூட்டும் அளவிற்குக் கட்டுப்பாடின்றி வளர அனுமதித்துவிட்டது என்று நீதிமன்ற அமர்வு வலியுறுத்தியது. தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப, அதற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், அதன் அளவை நிர்ணயிப்பதிலும் “தெளிவான முயற்சிகளின் பற்றாக்குறை” இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முறையான திட்டமிடல் இன்றி கருத்தடை, தடுப்பூசி முகாம்களை நடத்தியதற்காக மாநில, உள்ளாட்சி அமைப்புகளை விமர்சித்தது.
“இது அத்திட்டத்தின் நோக்கங்களையே சிதைப்பதாக உள்ளது. மாநில அரசுகள் உரிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டிருந்தால், தற்போதைய சூழல் இவ்வளவு அச்சமூட்டும் அளவை எட்டியிருக்காது,” என்று நீதிமன்றம் கூறியது.
