சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் பிறப்பு சான்றிதழை எளிமையாக பெறும் வசதி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான அரசுச் சான்றிதழ்களை எளிய முறையில் பெறுவதற்காக, சென்னை மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பிறப்புச் சான்றிதழைப் பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே, மிக எளிதாக வாட்ஸ்ஆப் செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் புதிய வசதியைச் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இனி பிறப்புச் சான்றிதழைப் பெற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கும், கணினி மையங்களுக்கும் அலைந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டம் குறித்துச் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இ.ஆ.ப. வெளியிட்ட அறிவிப்பில், “பெற்றோரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கே நேரடியாகப் பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் 9445061913 என்ற பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் மூலம் இந்தச் சேவையைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப் எண்: 9445061913
எளிய முறையில், கட்டணமின்றி விரைவாகப் பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம். இடைத்தரகர்கள் இல்லாத, காகிதமில்லா வெளிப்படையான நிர்வாகம்.
இந்த டிஜிட்டல் முறை மூலம், உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலி வழியாகவே சான்றிதழ்கள் கிடைப்பதால், சாமானிய மக்களும் தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்த முடியும். சென்னை மாநகராட்சியின் இந்த நுகர்வோர்-நட்பு (User-friendly) நடவடிக்கை, நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது..
