https://republictn.com/

உலக அரசியலில் நீண்டகால எதிரிகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான மோதல் தற்போது மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தங்களை தாக்க முயன்றால் அது மிகப்பெரிய இரத்த ஆறாக மாறும் என்றும், அதன் விளைவுகள் கணிக்க முடியாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கியூபா அதிபர் மிகுவேல் டயஸ்-கேனல் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கியூபாவின் முக்கிய உளவு அமைப்புகள் மற்றும் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த மோதலின் பின்னணியில் முக்கிய காரணமாக போர் ட்ரோன்கள் குறிப்பிடப்படுகின்றன. கியூபா, ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட அதிநவீன ராணுவ ட்ரோன்களை பெற்றுள்ளதாகவும், அவற்றை அமெரிக்காவின் குவாண்டானாமோ விரிகுடா பகுதியில் உள்ள ராணுவ தளம் அல்லது புளோரிடா மாகாணத்தின் மீது ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களை தொடர்ந்து, கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கியூபா அதிபர் இதனை மறுத்து, தங்கள் நாட்டை பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா ஏற்கனவே கியூபா மீது பொருளாதார போரை தொடங்கியுள்ளது. கியூபாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வெனிசுவேலாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதால், கியூபாவில் வரலாறு காணாத மின்தட்டுப்பாடு மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை ஒரு காரணமாக பயன்படுத்தி, கியூபாவை ராணுவ ரீதியாக முடக்க அமெரிக்கா முயல்வதாக கியூபா அரசு குற்றம் சாட்டுகிறது. 1960களில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முயற்சியை கியூபா மக்கள் முறியடித்ததைப் போலவே, இப்போதும் உறுதியுடன் போராடத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான கியூபாவின் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில் மெக்சிகோ போன்ற நாடுகள் கியூபாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் வாஷிங்டன் நிர்வாகம் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

ஒருபுறம் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், மறுபுறம் கியூபா மீதான இந்த நேரடி மோதல் போக்கு மத்திய அமெரிக்க பிராந்தியத்தை ஒரு பெரும் போர் அபாய சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள் கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது ஒரு மிகப்பெரிய சர்வதேச மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலகம் கவனித்து வருகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago