ஷேக் ஹசீனா, மிக விரைவில் பங்களாதேஷுக்குத் திரும்புவதாகக் கூறியுள்ளார். இந்தியாவில் வசிக்கும் ஷேக் ஹசீனா, ஒரு i-இ-மெயில் பேட்டியில், ”எனது இல்லாமை என்பது நான் மௌனமாக இருப்பதைக் குறிக்காது. நாட்டிற்காகத் தொடர்ந்து போராடி வருகிறேன். சர்வதேச அளவிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து 2024-ல் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது முதல் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது கட்சியான அவாமி லீக், பங்களாதேஷில் தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
”எனது வருகை எந்தவொரு குறிப்பிட்ட தேதியையும் சார்ந்தது அல்ல. முதலில், பங்களாதேஷில் ஒரு ஜனநாயகச் சூழல், கருத்துச் சுதந்திரம், அரசியல் உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை திரும்ப வேண்டும். இது எனது வருகைக்கு மட்டுமல்ல, நாட்டின் சுதந்திரத்திற்கும் பொது நலனுக்கும் அவசியம்” என்று அவர் கூறினார்.
அவாமி லீக்கை அழிக்க முடியாது.
”நான் 19 முறை தாக்கப்பட்டேன். ஆனால் ஒருபோதும் ஓயவில்லை. அவாமி லீக் மக்களின் கட்சி. வெறும் காகித உத்தரவால் அதை அழிக்க முடியாது. அவாமி லீக்கைத் தடை செய்து அழித்திருக்க முடிந்திருந்தால், பங்களாதேஷ் பிறந்திருக்காது.
பங்களாதேஷில் லட்சக்கணக்கான ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கான தலைவர்களும் இன்னும் கட்சியுடன் நிற்கிறார்கள். அரசாங்கம் அவாமி லீக்கிற்குப் பயப்படுகிறது. அதனால்தான் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
ஷேக் ஹசீனா இல்லாமல் கட்சியிலும் அவாமி லீக்கிலும் மாற்றங்கள் ஏற்படுவது குறித்த கேள்விக்கு, ”கட்சி ஜனநாயக முறையில் இயங்குகிறது. எந்தவொரு தலைவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், கட்சியே நடவடிக்கை எடுக்கும். ஆனாலும், எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்களின் அழுத்தத்தால் கட்சி வீழ்ச்சியடையாது.
முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டுகள்
இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ் மீது ஹசீனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ”யூனுஸ் அரசாங்கம் அவாமி லீக் தலைவர்கள், ஆதரவாளர்களுக்கு எதிராக ஒரு அரசியல் இனப்படுகொலையை நடத்தியது. சுமார் 600 தலைவர்களும் தொண்டர்களும் கொல்லப்பட்டனர். 150,000-க்கும் மேற்பட்டோர் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வங்கதேசத்தில் ஒரு இயல்பான ஜனநாயகச் சூழல் நிறுவப்பட்டவுடன், அனைத்துத் தலைவர்களும் திரும்புவார்கள்.
இந்தியா-பங்களாதேஷ் உறவுகள்
இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா நமது அண்டை நாடு மட்டுமல்ல, பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்திலும் அது ஒரு முக்கியப் பங்காற்றியது. ஆனாலும், நம் நாட்டில் உள்ள சில அரசியல், தீவிரவாதக் குழுக்கள், அரசியல் செய்வதற்காக நீண்ட காலமாக இந்திய எதிர்ப்புப் பேச்சுகளைப் பயன்படுத்தி வருகின்றன. முகமது யூனுஸின் இடைக்கால அரசும் அதையே பின்பற்றியது” என்று அவர் தெரிவித்தார்.
