நாளை அல்லது நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்வு முடிவுகள் வெளியீடு மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்ட புத்தகங்களையும் இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
ஏற்கனவே 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், வரும் ஜூன் 1ஆம் தேதி புதிய கல்வியாண்டுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியில் கூறியதாவது: “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் மாணவிகளும் வெற்றியாளர்களே. நாளை மறுநாள், அதாவது 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். அதேபோல், 2026ஆம் கல்வியாண்டுக்காக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என தெரிவித்தார்.
