சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொண்டுள்ள லண்டன் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எவ்வித அரசியல் விமர்சனமும் செய்யாமல், சிரித்தபடியே “வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..” என நச் பதில் அளித்தார்.
மேலும், “கண்ணால்தான் பார்க்கிறேன். வேறு என்னத்தைப் பார்க்கிறேன்? வேறு ஒன்றும் இல்லை. அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. வாழ்த்துகள். அவருடைய பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று கூறினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த எதிர்பாராத பதிலைக் கேட்டு அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழகத்தில் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் இந்த அதிகாரப்பூர்வ லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, பிரிட்டன் பயணம் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியிருப்பதால், ஐந்து முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் நிலவரம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அவரவர் கட்சியின் நிலைப்பாட்டை அவரவர்கள் எடுத்துரைக்கிறார்கள். அது குறித்து எனக்கு எந்தவித கருத்தும் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. எனவே, அது அவர்களுடைய கட்சியின் நிலைப்பாடு” என்றார்.
“எங்களைப் பொறுத்தவரைக்கும், நாங்கள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். நிச்சயமாக அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும், “அன்றைக்கே நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நாம் பரந்தாமனையும், சுகன்யாவையும் மதுராந்தகத்திற்கும், அதேபோல தாராபுரத்திற்கும் வேட்பாளர்களாக அறிவிக்க இருக்கிறோம். நிச்சயமாக உங்களுடைய ஆதரவு வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அண்ணா, கண்டிப்பாக தேமுதிக திமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கும். எனவே, தேமுதிகவினுடைய ஒத்துழைப்பு 100 சதவீதம் இருக்கும்’ என்று அண்ணனிடம் சொன்னேன்” என்றார்.
“அதேபோல, உங்களுடைய ஒப்புதலோடு இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். தாராளமாக அறிவியுங்கள் அண்ணா. முழு ஒத்துழைப்பு தேமுதிக சார்பாக இரண்டு இடைத்தேர்தல்களிலும் இருக்கும் என்று அன்றைக்கே நான் சொல்லியிருக்கிறேன். அதுபோல, அவரவர் கட்சியின் நிலைப்பாட்டின்படி, அவரவர் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் உழைக்கப் போகிறோம். முடிவு என்பது மக்களின் கையில் இருக்கிறது. மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு” என்றும் பிரேமலதா கூறினார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கண்டிப்பாக, கண்டிப்பாக. அண்ணன் ஸ்டாலின் அவர்கள் அன்றைக்கே என்னை அழைத்திருக்கிறார். நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். தலைமைக்கழகத்தில் வேட்பாளர்களாக இருக்கும் பரந்தாமன் அவர்களும், சுகன்யா அவர்களும் என்னிடம் வந்து ஆசி பெற்றனர். உங்களுடைய முழு ஒத்துழைப்பு வேண்டும், நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அண்ணன் ஸ்டாலினும் அழைத்திருக்கிறார். கண்டிப்பாகப் போவேன். அதில் மாற்றுக் கருத்து கிடையாது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தங்களை கைவிட்டுவிட்டதாகவும், பல நாட்களாக திமுக கூட்டணியில் இருந்த தங்களுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக வந்த தேமுதிகவுக்கு அதிகமான தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது குறித்து பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “16ஆம் தேதி மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதுபற்றி அன்றைக்கு நான் தெளிவாக என்னுடைய பதிலைச் சொல்கிறேன்” என்றார்.
மேலும், “இன்றைக்கு ஒரு நல்ல நாள். கட்சி தொடங்கிய நாள், விநாயகர் சதுர்த்தி. எல்லாரும் சந்தோஷமாக இருப்போம். நீங்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் 16ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அன்றைக்கு நான் தெளிவாகப் பதில் சொல்கிறேன். எந்தக் கேள்வி கேட்டாலும் நான் சொல்கிறேன். ஓகே, சரிங்களா? எல்லாரும் இருந்து சாப்பிட்டுப் போங்கள். வந்ததற்காக உங்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறி பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார்.
