பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பேச்சை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் விமர்சனங்களுடனும் தொடர்புபடுத்தித் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என ஸ்டார் விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி என்றும், நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு தனிநபர், அரசியல் இயக்கம், கொள்கை அல்லது நிகழ்வுகளுடன் நிகழ்ச்சியில் இடம்பெறும் கருத்துகளைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதை தயாரிப்பாளர்கள் ஆதரிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடில், ‘ஜனநாயக அறை’ (Democracy Room) என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்க், ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடர் போன்ற சூழலில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த எபிசோடை விஜய் டிவி, “VJS அசெம்பிளி” (VJS Assembly) என்ற பெயரில் புரமோட் செய்தது.
இந்த டாஸ்க்கின்போது போட்டியாளர் ஷாதிகாவின் தலைமைப் பண்பு குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி, “தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு லீடருக்கான குவாலிட்டி இல்லை. அது ஏமாற்று வேலை” என்று விமர்சித்தார்.
விஜய் சேதுபதி தனது பேச்சில் யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அவரது இந்தக் கருத்துகள் தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் அண்மையில் சட்டமன்றத்தில் பேசிய பேச்சு மற்றும் தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிடப்பட்டன.
இதையடுத்து, விஜய் சேதுபதியின் பேச்சு விஜய்க்கு எதிரான மறைமுக விமர்சனம் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.
அதே நேரத்தில், நடுநிலையான பார்வையாளர்கள் மற்றும் சில விமர்சகர்கள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இது பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கிற்காக பேசப்பட்ட சாதாரண கருத்து என்றும், இதற்கு இணையவாசிகள் தேவையின்றி அரசியல் சாயம் பூசுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், பிக் பாஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே என்றும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் அந்தப் போட்டியின் சூழலுக்கு உட்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு தனிநபர், அரசியல் இயக்கம், கொள்கை அல்லது நிகழ்வுகளுடன் நிகழ்ச்சியில் இடம்பெறும் கருத்துகளைத் தொடர்புபடுத்தித் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, விஜய் சேதுபதியின் பேச்சை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்துடனும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தற்போது நிஜ வாழ்க்கையிலும் தவெக அரசியல் வருகைக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஒரு ‘நிழல் யுத்தம்’ தொடங்கிவிட்டதா என ரசிகர்கள் சுவாரசியமாக விவாதித்து வருகின்றனர். இதனை ‘Reel vs Real’ என்ற கோணத்திலும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும், விஜய் சேதுபதியின் பேச்சால் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், கடந்த 2021-ஆம் ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது குழுவினர் மீது மர்ம நபர் ஒருவர் பாய்ந்து தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான பழைய விமான நிலைய வீடியோவை மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவுடன் விஜய் சேதுபதியின் தற்போதைய ஆடியோவை இணைத்து, வடிவேலுவின் பிரபலமான “தப்பு பண்ணிட்டியே சிங்காரம்…” என்ற மீம்ஸ் வசனத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் சிலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் உள்ளிட்டோரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு ரியாலிட்டி ஷோவில் கேப்டன்ஷிப் டாஸ்க்கிற்காக பேசப்பட்ட சாதாரண கருத்துக்கு இணையவாசிகள் அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்றுவதாகவும், உண்மையான துணிச்சல் இருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாக விமர்சிக்க வேண்டும் என்றும் புளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் இந்த விவகாரத்தை விமர்சன ரீதியாக அணுகியுள்ளனர்.
இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், நிகழ்ச்சியில் இடம்பெற்ற கருத்துகளை அரசியல் ரீதியாகத் தொடர்புபடுத்த வேண்டாம் என விஜய் டிவி வெளியிட்டுள்ள விளக்கம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, இவ்வளவு பெரிய அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்த சீசனைத் தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரம்மாண்ட சம்பளம் குறித்த தகவல்களும் இணையத்தில் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகின்றன.
ஊடகத் தகவல்களின்படி, இந்த சீசனுக்காக விஜய் சேதுபதிக்கு சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியை மாற்றாமல், தொடர்ந்து ‘போல்டு’ ஆகப் பேசி வருகிறார் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
