மூடநம்பிக்கைகளின் பெயரால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தி மாந்திரீகம் நிர்வாண பூஜை செய்தவர்களை கேள்விபபட்டு இருக்கிறோம். ஆனால், ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரே ஆடைகளை அவிழ்த்துப் போட்டு பூஜையில் ஈடுபட்டதோடு, தனது மனைவியையும் நிர்வாணப்படுத்தி பூஜை செய்தவரைக் கண்டு திருப்பத்தூரே ஆடிப்போய் கிடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த கரம்பூர் ஏரிக்கரைப் பகுதியை சேர்ந்தவர் பழனி – தீபா தம்பதியினர். கடந்த 4-நாட்களாக இருவரும் இரவு நேரங்களில் நிர்வாணமாக ஊரை வலம் வந்து பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட கிராம மக்கள் ”பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்படி அவிழ்த்துப் போட்டு ஊரை சுற்றி திரிந்தால் என்ன அர்த்தம்?” எனக் கேட்டு அதட்டி இருக்கிறார்கள். அதற்கு பழனி, ”என் மீது கருப்பன் சாமி இறங்கி இருக்கிறான்டா… நான் இதுபோன்ற பூஜைகளை தொடர்ந்து செய்வேண்டா.. என் மனைவியும் என்னுடன் நிர்வாணமாகத்தான் வருவாடா.. இப்படி யாராவது கேட்டால் நீங்கள் தடம் தெரியாமல் போய்விடுவிங்கடா” என அருளோடு பதிலுக்கு மிரட்டி உள்ளார்.

இதனை கேட்டு நடுங்கிப் போன கிராம மக்கள், ”நமக்கு எதற்கு வம்பு..?”என இருந்த நிலையில், வழக்கம் போல 6-ம்தேதி இரவும் பழனி தான் வளர்த்த மாட்டின் வாலை ஒட்ட வெட்டி, நிர்வாணமாக அமர்ந்து மாந்திரீக பூஜையில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் இதுபோன்று கொடூர முறையில் பூஜைகளை செய்யக்கூடாது என திட்டி தீர்த்திருக்கிறார்கள். அதனை பொருட்படுத்தாத பழனி, பூஜையை தொடர்ந்ததால் நிம்மதியை இழந்த மக்கள் ”இவனை இப்படியே விட்டால் சரிவராது” என பழனியை பிடித்து ஆடைகளை அணிவித்து, கை, கால்களை கட்டி குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதனை தெரிந்துக் கொண்ட பழனி, ஏதோதோ மந்திரங்களைச் சொல்லி முணுமுணுத்திருக்கிறார். இதனைக் கண்ட சிலர் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். சிலர், அவரை வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ எடுப்பதை கண்ட
பழனி, ‘நிர்வாண பூஜையை நல்லா Live போடுங்க’ எனக் கலகலவென்று சிரிக்க தொடங்கியவரை . பின்னர் சாவகாசமாக வந்த குரிசலாபட்டு போலீசார் கட்டை அவிழ்த்து விட்டு, இவருக்கு மனநிலை சரியில்லை என கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதனைக் கண்ட கிராமத்தினர் மந்திரவாதி பழனி மீது நடவடிக்கை எடுக்காமல் ட்ரீட்மெண்ட்டுக்கு அனுப்பியுள்ளது எந்த விதத்தில் நியாயம்?. பல வருஷமா பழனி இப்படிதான் செஞ்சுட்டு வருகிறார். நாங்களும் பலமுறை சொல்லி பார்த்தாச்சு. அவர் கேட்கவில்லை என கொதித்தனர்.
இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் கேட்டபோது… ”அன்று வேறொரு கேஸ் முடித்துவிட்டு வருவதற்கு சிறிது நேரம் தாமதமாகிவிட்டது. அவர் மந்திரவாதி இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிந்ததால் மனநிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்பில்லை” என்றனர்.
குறிப்பு:
மனநல உதவி எண் (மாநில அரசு) 104 (மனநல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் பெண்கள் உதவி எண்: 181 (பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில்..)
