நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பொதுக்கூட்டம், செய்தியாளர்கள் பேட்டியகளின் போது தவெகவையும், முதல்வர் விஜயையும் சரமாரியாக இறங்கி அடித்து வருகிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும் என கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்: இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராகப் போற்றப்படும் மு.க. ஸ்டாலினை சிலர் கொச்சைப்படுத்திப் பேசி வருகின்றனர். கலைஞர் மற்றும் தளபதியைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களை மனதில் வைத்துக்கொண்டு, வரும் 21 நாட்களும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தோண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்.
இங்கு போட்டியிடும் பரந்தாமன் எழும்பூர் எம்எல்ஏவாக இருந்தபோதே அற்புதமாகச் செயல்பட்டவர். அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 3 மாதங்களுக்குள் தவெக ஆட்சியை வீழ்த்துவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வார் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். மதுராந்தகம் தொகுதியில் நாம் வெற்றி பெற்றால், வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழும். தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் வாய்ப்பு நம் கையில்தான் உள்ளது.
வருகிற 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வது முதல் பிரச்சாரம் முடியும் வரை திமுக தொண்டர்களும் கூட்டணிக் தோழர்களும் தீயாக உழைக்க வேண்டும். இந்த வைராக்கியத்துடன் பணியாற்றினால் பரந்தாமன் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
