வங்கதேசத்தில் நிலவும் மிகக் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
நாட்டிற்குத் திரும்புவதன் முக்கிய காரணம்
தான் வங்கதேசம் திரும்புவது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல என்றும், ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் தனது ஆதரவாளர்களுடனும் மக்களுடனும் நிற்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வங்கதேசம் என் தாய்நாடு. என் தந்தை பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான், தாய், சகோதரர்கள் என எனது குடும்பமே இந்த மண்ணில்தான் கொல்லப்பட்டது. நான் 19 முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பியுள்ளேன். சிறைவாசம், ராணுவ ஆட்சி மற்றும் அரசியல் பழிவாங்கல்களைச் சந்தித்துள்ளேன். உயிருக்கு அஞ்சி எனது மக்களை விட்டு விலகி வாழ விரும்புவதை விட, நாட்டிற்குத் திரும்பி எதையும் எதிர்கொள்ளத் தயார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஆவாமி லீக் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கைது செய்யப்பட்டு, வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுப் பழிவாங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்காகச் செய்த சாதனைகளையும், தற்போதைய இடைக்கால அரசின் கீழ் நாடு சந்தித்துள்ள சரிவையும் அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
தனது ஆட்சியில் பத்மா பாலம், மெட்ரோ ரயில், ரூப்பூர் அணுமின் நிலையம், கர்ணபுலி சுரங்கம் போன்ற பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நாட்டின் ஜிடிபி 70 பில்லியன் டாலரில் இருந்து 450 பில்லியன் டாலராக உயர்ந்தது. தலா வருமானம் $482-லிருந்து $2,784 ஆக அதிகரித்தது. வறுமை 41 சதவீதத்திலிருந்து 18.7 சதவீதமாகக் குறைந்தது.
2024 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், ஜிடிபி வளர்ச்சி 6.22% இலிருந்து 3.14% ஆகச் சரிந்துள்ளது. வறுமை மீண்டும் 29.9% ஆக அதிகரித்துள்ளது. வேலையின்மை உயர்ந்ததுடன், 857 தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தனக்கு விதித்துள்ள மரண தண்டனை குறித்துப் பேசிய அவர், “அரசியல் உள்நோக்கத்தோடு, பிரதிவாதியின் தரப்பு நியாயங்களைக் கேட்காமல், முறையான தற்காப்பு வாய்ப்பளிக்கப்படாமல் வழங்கப்பட்ட ஒருதலைப்பட்சமான தீர்ப்பு உண்மையான நீதி ஆகாது. எனக்கு அரசியல் பழிவாங்கல் தேவையில்லை; வெளிப்படையான, நடுநிலையான விசாரணை வேண்டும்.”
ஜூலை-ஆகஸ்ட் 2024 வன்முறைகள் குறித்து விசாரிப்பதற்காகத் தான் ஆட்சியில் இருந்தபோது அமைக்கப்பட்ட நீதித்துறை விசாரணை ஆணையத்தை, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ரத்து செய்துவிட்டது என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு விலக்களித்து உண்மையை மறைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் நிலைப்பாடு- சர்வதேச சமூகம்
தற்போதைய இடைக்கால அரசுடனோ அல்லது பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி உடனோ தான் எந்தவிதப் பின்புல ரகசிய உடன்பாடும் செய்துகொள்ளவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் ஒப்படைப்பு கோரிக்கை என்பது இந்திய அரசின் சட்டப் பூர்வமான நடைமுறை சார்ந்த விஷயம். இந்தியா எப்போதும் வங்கதேசத்தின் சிறந்த நண்பன். ஆனால், தாய்நாட்டிற்குத் திரும்புவது தனது சொந்த அரசியல் மற்றும் தர்மம் சார்ந்த முடிவு என்று குறிப்பிட்ட ஹசீனா, சர்வதேச சமூகம் வங்கதேசத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆவாமி லீக் கட்சியின் எதிர்காலம்
ஆவாமி லீக் கட்சியைக் காகிதத்தில் அல்லது நிர்வாக ரீதியாகத் தடை செய்ய முடியுமே தவிர, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இருந்து நீக்க முடியாது என்று கூறிய அவர், “எங்கள் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என அரசு நினைத்தால், தடையை நீக்கித் தேர்தலில் போட்டியிட அனுமதியுங்கள். மக்கள் வாக்குப்பெட்டியில் தீர்மானிக்கட்டும்” எனச் சவால் விடுத்துள்ளார்.
