காங்கோவில் பரவி வரும் எபோலா நோய் தொற்றுக்கு எதிரான அவசர கால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசர கால நிவாரண நிதியில் இருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 574 கோடி ரூபாய்) நிதி ஒதுக்கியுள்ளது.
ஆப்பிரிக்காவின் உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், மனிதர்களை விரைவாக பாதிக்கக்கூடியது.
இந்நோயை தாமதமின்றி கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க தவறினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
