https://republictn.com/

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு அமைத்த உயர்நிலை நிபுணர் குழு, தேர்வு சீர்திருத்தங்களுக்காக 95 விரிவான பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. இருப்பினும், மீண்டும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதுடன் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருப்பது, தேசிய அளவிலான தேர்வில் உள்ள கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கான உறுதியான சான்று என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அறிமுகமான நாள் முதலே தமிழக அரசு அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு இல்லாமல், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகள் தங்களது விதிமுறைகளின்படி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago