https://republictn.com/

பஞ்சாபில் பட்டப்பகலில் நான்கரை வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா, பாட்டியை தாக்கிவிட்டு சிறுமியை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பள்ளிக்குச் சென்று தாத்தா, பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் திரும்பிய சிறுமியை மர்ம கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற காட்சிகள்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக, சிறுமியின் தாயே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முகாலி மாவட்டம், குராலி பகுதியில் நான்கரை வயது சிறுமி தனது தந்தை வழி தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், அந்த சிறுமி குராலியில் உள்ள மழலையர் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், பள்ளி முடிந்ததும் சிறுமியை அவரது தாத்தா, பாட்டி இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டின் அருகே வந்தபோது, பாட்டி மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டின் கேட்டை திறந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவருடன் வந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்தி, சிறுமியை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதிய தம்பதியினர் சிறுமியை மீட்க போராடினர். அதற்குள் அங்கு வந்த கார் ஒன்றில் இருந்து இறங்கியவர்கள், முதியவர்களை தாக்கிவிட்டு சிறுமியை காருக்குள் ஏற்றினர். இருந்தபோதிலும், காரின் முன் நின்று தங்களது பேத்தியை காப்பாற்ற முதியவர்கள் முயன்றனர். ஆனால், கார் அவர்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், மீண்டும் ரிவர்ஸில் வந்த கார், உதவிக்கு வந்தவர்களின் மீது மோதுவது போல அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மகள் தன்னுடனேயே வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சூழலில், தனது மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் திட்டமிட்டு குழந்தையை கடத்தியிருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமியை தாத்தா, பாட்டியிடமிருந்து வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பஞ்சாப் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago