https://republictn.com/

இந்த வெள்ளை அறிக்கையில் விளக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் குறித்து நீதி அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் பழைய வாதங்களே. இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பலமுறை விளக்கமளித்திருக்கிறேன்.

இந்த முறை அவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த ஆட்சி முடிவடையும் போது தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கும் என்பதாகும். அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அந்தக் கடன் ரூ.4.8 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் அதனை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள்.

பொதுவாக நிதி நிர்வாகத்தின் தன்மை என்ன, தமிழ்நாட்டின் நிதிச் சூழ்நிலை என்ன, வரலாற்று ரீதியாக இந்தக் கடன் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2006–2007 ஆம் ஆண்டில் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அவருக்கு முந்தைய ஆட்சியிடமிருந்து ரூ.57,457 கோடி கடன் இருந்தது. 2011–2012 ஆம் ஆண்டில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அந்தக் கடன் ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.1,13,500 கோடியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, 2016–2017 ஆம் ஆண்டில் அந்தக் கடன் ரூ.2,16,166 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.1.13 லட்சம் கோடியில் இருந்து மீண்டும் ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்திருந்தது.

பின்னர், 2021–2022 ஆம் ஆண்டில் எடப்பாடியார் ஆட்சிக் கால முடிவில், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, மாநிலக் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 2.7 மடங்கு உயர்வாகும்.

இப்போது ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் என்று கூறினால், வரலாற்று ரீதியாக மாநிலக் கடன் தொடர்ந்து இவ்வாறான வளர்ச்சி விகிதத்தில்தான் அதிகரித்து வந்துள்ளது. இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டும் நடந்த ஒரு விசேஷ நிகழ்வு அல்ல. ரூ.4.8 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்தது இந்த ஆட்சியின் தவறு என்று மட்டும் கூறுவது சரியான அணுகுமுறை அல்ல.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நான் புள்ளிவிவரங்களுடன் கூறியதைப் போல, இந்த இரு மடங்கு வளர்ச்சி என்ற போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், நான் இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு சவாலாக கூற விரும்புகிறேன்.

ஒருவேளை தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்து, அடுத்த தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த ஐந்து ஆண்டு காலத்தின் முடிவில் மாநிலக் கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்பது நிச்சயம். இதை நான் ஒரு சவாலாக தெரிவிக்கிறேன். இதை யாராலும் தவிர்க்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக கூறுகிறேன்.

மேலும் ஒரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். “பக்கம் பக்கமாக எழுதி கடன் வாங்கிவிட்டார்கள்” என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கு நான் இந்த அரசையும், நிதித்துறையையும் நோக்கி ஒரு சவாலாக கூறுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற சராசரி கடனைவிட, உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறைவான அளவு கடன் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபித்துவிடுங்கள். அப்படிச் செய்தால், நான் என்னுடைய பொறுப்பிலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

நான் மீண்டும் சவாலாகக் கூறுகிறேன். எங்களின் ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட சராசரி கடனைவிட, உங்கள் ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டிலும் குறைவான கடன் பெற்று, மாநில நிதியை சிறப்பாக நிர்வகித்தீர்கள் என்பதை நிரூபியுங்கள்.

உங்களது வெள்ளை அறிக்கையிலேயே, பல நல்ல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று எங்களுக்கே பாராட்டு வழங்கியுள்ளீர்கள். அந்தத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, நாங்கள் கொண்டு வந்த திட்டங்களையும் நிறைவேற்றி, நீங்கள் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, அதே நேரத்தில் திறமையான நிதி மேலாண்மையையும், நிதி ஒழுங்கையும் (Fiscal Prudence) வெளிப்படுத்தி, எங்களை விட குறைவான கடன் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபித்துவிட்டால், நான் என் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

இதை இந்த அரசுக்கு நான் விடுக்கும் வெளிப்படையான சவாலாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago