புதுச்சேரியில் வெறும் காபி பொடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஓவியம் ஒன்று உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூரிகை மற்றும் வழக்கமான வண்ணங்களுக்கு பதிலாக, முழுமையாக காபி பொடியைக் கொண்டு இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. காபி பொடியின் வெவ்வேறு அடர்த்திகளைப் பயன்படுத்தி மிகத் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த அசாதாரண முயற்சி ‘Virtue Book of World Records’ நிறுவனத்தால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் நோக்கில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டது. ‘தமிழ் வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் மாற்றப் பயிற்சி’ அமைப்பைச் சேர்ந்த 100 பயிற்சியாளர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வை ‘சர்வமங்களா அகாடமி’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆர். பாலாஜி ஸ்ரீனிவாசன் மற்றும் பி. சுகந்தினி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பங்கேற்ற 100 நபர்களும் தலா ஒரு சதுர அடி அளவிலான 100 தனித்தனி துண்டுகளில் காபி பொடியைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்தனர். பின்னர் அந்த 100 துண்டுகளையும் ஒன்றாக இணைத்து, 100 சதுர அடி பரப்பளவுடைய பிரம்மாண்ட லோகோ மற்றும் ஓவியமாக வடிவமைத்தனர்.
இந்த சாதனை “Largest Coffee Painting Puzzle Picture” என்ற பெயரில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ‘தி ஷோர் திரிஷ்வம்’ வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, கலையின் மூலம் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு புதுமையான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
