புதுச்சேரி அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மெகா நிலநடுக்கம் உருவாகத் தொடங்கியுள்ளது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், லட்சிய ஜனநாய கட்சி மற்றும் அதிமுக தலா 1 இடத்திலும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸின் ரங்கசாமி பொறுப்பேற்று, 5 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால், இன்றுவரை அந்த அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.
தற்காலிக சபாநாயகராக அதிமுக அன்பழகன் தொடர்கிறாரே தவிர, முறைப்படி இன்னும் சபாநாயகர் தேர்தலே நடத்த முடியாத அளவுக்கு அங்கே மிகப்பெரிய நிர்வாகத் தேக்கமும், பனிப்போரும் அரங்கேறி வருகிறது.
ரங்கசாமியை முடக்க ஸ்கெட்ச்
பாஜகவின் உத்தரவுகளையும், டெல்லி மேலிடத்தின் நிபந்தனைகளையும் முதலமைச்சர் ரங்கசாமி மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதே இந்த இழுபறிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கடுப்பான டெல்லி பாஜக, ரங்கசாமிக்குத் தகுந்த பாடம் புகட்டவும், புதுச்சேரியில் தாமரை ஆட்சியை உட்கார வைக்கவும் தேர்தலுக்கு முன்பே ஒரு மெகா ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது.
இந்த ஆபரேஷனைத் திரைமறைவிலிருந்து தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் டெல்லியின் புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா.
தாவத் தயாராகும் எம்எல்ஏக்கள்
ரங்கசாமியின் பிடியிலிருந்து ஆட்சியைக் கழற்ற, அவருக்குக் கீழ் இருக்கும் எம்எல்ஏக்களை அப்படியே தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதன்படி, பல்வேறு கட்சிகளில் இருந்து வந்து தற்போது என்ஆர் காங்கிரஸில் வெற்றி பெற்றிருக்கும் முக்கியப் புள்ளிகள் அனைவரும் மொத்தமாக பாஜகவுக்குத் தாவத் தயாராகிவிட்டனர் என்ற பகீர் தகவல் கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது
அதிமுகவில் சீட் கிடைக்காமல் என்ஆர் காங்கிரஸில் களம் கண்டு வென்ற வையாபுரி மணிகண்டன், காங்கிரஸில் சீட் கிடைக்காமல் விலகி வென்ற ஐயப்பன், பாகூர் மோகன்ராஜ், காரைக்கால் திருமுருகன், இந்திராநகர் ஏகேடி ஆறுமுகம், வில்லியனூர் ரவிக்குமார், சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் இவர்கள் அத்தனை பேரும் தற்போது மொத்தமாக பாஜக பக்கம் சாய்வதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அண்டர்கிரவுண்ட் டெல்லி டீல்
பாஜக தலைமையில் மாற்று ஆட்சி அமைந்தால், தற்காலிக சபாநாயகராக இருக்கும் அதிமுகவின் அன்பழகனும் தங்களுக்கு முழு ஆதரவைத் தருவார் என்று டெல்லி மேலிடம் உறுதியாக நம்புகிறது. என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் திடீரென ரங்கசாமியை கைவிட்டு பாஜகவுக்கு ஆதரவு தரப்போவதால், எந்த நேரத்திலும் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்ந்து, புதுச்சேரியில் முதல்முறையாக பாஜகவின் நேரடி ஆட்சி அமையப்போவதுதான் தற்போதைய அண்டர்கிரவுண்ட் டெல்லி டீல்!
பாஜகவின் இந்த அசுர வேக அரசியல் வேட்டையைச் சமாளித்து ரங்கசாமி தன் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வாரா? அல்லது டெல்லி விரித்த வலையில் சிக்கிப் புதுச்சேரி சிம்மாசனத்தைத் தாரை வார்ப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-சக்திவேல், புதுச்சேரி செய்தியாளர்.
