தவெக-வின் அசுர வளர்ச்சியும், எதிர்க்கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கிப் படையெடுப்பதும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் திராவிட அரசியலின் இரு பெரும் துருவங்களான திமுகவும், அதிமுகவும் கைகோர்க்கப் போகின்றன என்ற புதிய விவாதம் தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
கரையும் அதிமுக
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆடவ் அர்ஜூனா, ”முக்கிய தலைவர்கள் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் 60% கட்டமைப்பு ஏற்கனவே தவெக-வோடு கரைந்துவிட்டது. இன்னும் எஞ்சியிருப்பது வெறும் 30% நிர்வாகிகள்தான். இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், தவெக-வின் வளர்ச்சியை முடக்கவும் ஒரு ரகசிய உடன்படிக்கைக்கு வந்துவிட்டனர். இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலோ அல்லது மக்களவைத் தேர்தலிலோ வெளியாகும்.
டெல்லியின் சப்போர்ட்டில் ‘புடலங்காய் கூட்டணி’
திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில், அவர்களிடம் இருக்கும் பணபலமும், பாஜக-வின் மறைமுக ஆதரவும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெறும் யூகமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய தலைவர் பேபி “நாங்கள் ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்றால், அதிமுக, திமுக, பிஜேபி ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைக்கப் போகின்றன, அதைத் தடுக்கவே நாங்கள் தவெக-வை ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம் “திமுக, அதிமுக – பிஜேபி சேர்ந்து ஒரு ‘புடலங்காய் கூட்டணியை’ உருவாக்குவீர்கள், அதற்கு நாங்கள் சப்போர்ட் பண்ணுவோமா?” என சாடியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் “திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். முதலீடு, அதிகாரப் பகிர்வு அடிப்படையில், முதல் இரண்டரை வருடம் இபிஎஸ் முதலமைச்சர், அடுத்த இரண்டரை வருடம் உதயநிதி முதலமைச்சர் என ஒரு ரகசிய சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டது” என்ற அதிரடித் தகவலைப் போட்டுடைத்துள்ளனர்.
வாரிசு அரசியலின் அடுத்த அத்தியாயம்
திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதிமுக, தற்போது அதே பாதையை நோக்கி நகர்கிறது.. இபிஎஸ்-ஸின் மகன் மிதுன் என்பவரை கட்சியின் இளைஞரணித் தலைவராக்கி, கட்சியை வழிநடத்த வைக்க அதிமுகவிற்குள் தீர்மானங்கள் போடப்பட்டு வருகின்றன..”என் மகன் கட்சியில் வெறும் உறுப்பினர்தான், அவனுக்கு அரசியல் ஆசை இல்லை” என இபிஎஸ் மழுப்பினாலும், இதே கதையைத்தான் முன்பு திமுகவும் கூறியது. “25 வருஷம் என் மகன் உறுப்பினராக இருந்தார், அப்புறம் இளைஞரணி தலைவர், எம்.எல்.ஏ, மினிஸ்டர், இப்போது துணை முதல்வர்” என்று உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் போடப்பட்ட அதே ஸ்கெட்ச் தான், இப்போது அதிமுகவிலும் மிதுனுக்காகத் தயாராகி வருகிறது. இதனைப் புரிந்துகொண்டதால்தான், உண்மையான தொண்டர்களும், மாவட்டச் செயலாளர்களும் அதிமுகவை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
உண்மையான விசுவாசிகளின் குமுறல்
திமுகவோடு எந்தக் காலத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது” என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கை வழியில் வந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள் அதிமுகவிற்குள் கடுமையாகக் குரல் கொடுத்தனர். ஆனால், இபிஎஸ் தலைமை இவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. மதுராந்தகம், மரகதம் குமராவேல் மற்றும் 4 எம்.எல்.ஏ-க்கள்தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர். திமுகவோடு கூட்டணி வைக்கும் ஒரு கட்சியில் எங்களால் நீடிக்க முடியாது. புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்டு, பெயரிடப்பட்ட நாங்கள், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தைரியமாகப் பதவியைத் துறந்து தவெக-வில் இணைந்தனர்.
பேப்பர் லெவலில் சுருங்கும் அதிமுக?
ஒருபுறம் அறிவாலயத்தின் “அப்பா – மகன்”, மறுபுறம் நெடுஞ்சாலை நகரின் “அப்பா – மகன்” (இபிஎஸ் – மிதுன்) என இரு தரப்பும் இணைந்து தமிழ்நாட்டின் அதிகாரத்தை தங்களுக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்ள டெல்லியின் ஆசியோடு காய் நகர்த்தி வருகின்றனர் ஆனால், இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், எம்.எல்.ஏ-க்களும் தங்களின் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தவெக தலைவர் விஜய் பின்னால் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். இந்த மெகா கூட்டணி மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், களத்தில் வேலை செய்ய ஒரு நிர்வாகி கூட இல்லாமல், அதிமுக வெறும் “பேப்பர் லெவல்” கட்சியாகச் சுருங்கிவிடும்” எனக் கூறியுள்ளார் ஆதவ் அர்ஜூனா.
