பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் ஆளுங்கட்சியான தவெக நோக்கிப் படையெடுத்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் பதற்றங்களுக்கு இடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதல்வர் விஜய், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
தூய சக்தியா? நாசகார சக்தியா?
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பரபரப்பாகக் காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது எதிர்க்கட்சிகளின் கோட்டைகளைத் தகர்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, திருச்சியில் அதிமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் விஜய் மீதும், அவரது தவெக அரசின் மீதும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடுத்துள்ள அம்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
“விஜய் தான் குதிரை பேரத்தின் முதல் குற்றவாளி
”தவெக தன்னை ஒரு தூய்மையான, ஊழலற்ற மாற்று சக்தியாகக் காட்டிக்கொண்டாலும், அதன் பின்னணியில் அப்பட்டமான அதிகார பலமும், குதிரை பேரமும் ஒளிந்திருக்கிறது. அரசியல் குதிரை பேரத்தில் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய் தான். எங்களது அமமுக சார்பில் வென்ற எஸ்.காமராஜிடம் தவெக தரப்பு பேரம் பேசியதும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொன்னதுமே இதற்கு அப்பட்டமான சாட்சிகள். தவெக என்பது ஒரு தூய சக்தி கிடையாது. அது மக்களை ஏமாற்றும் ஒரு நாசகார சக்தி” எனக் கூற்யுள்ளார் டிடிவி தினகரன்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைத் தவெக தன் வசப்படுத்த முயல்கிறார் விஜய்.
வைகோவின் ‘கூட்டணி தர்மம்’ – முதுகில் குத்தும் செயல்
திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக தற்போது விமர்சித்து வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. திமுக கூட்டணியில் நீடித்தவரை ஊழலைப் பற்றிப் பேசாமல் மௌனம் காத்துவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு அதற்கு ‘கூட்டணி தர்மம்’ என்று வைகோ காரணம் கூறுவது, அரசியல் சந்தர்ப்பவாதம். அது தங்களை நம்பியிருந்தவர்களுக்குச் செய்யும் ‘முதுகில் குத்தும் செயல்’.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெக-வைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். சினிமாவில் பிரபலமானவர் என்பதால் மட்டுமே விஜய்க்கு இந்தத் தனிப்பெருங்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளதே தவிர, மக்கள் அவருக்கு முழுமையான பெரும்பான்மையைத் தரவில்லை. திமுகவின் தயவில் வென்ற பிற கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக இன்று ஆட்சி அமைத்துள்ளது. எனவே, தவெக ஒருபோதும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மாற முடியாது. மக்கள் இதை விரைவில் புரிந்துகொள்வார்கள்.
அதிமுக மாஜிக்களுக்கு எச்சரிக்கை
இபிஎஸ்-ஸுடன் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் அமைச்சர்ககளின் எதிர்காலம் கேள்விக்குறியாகப் போகிறது. அதிமுகவில் இருந்து தவெகவிற்குச் சென்றவர்களை முதல்வர் விஜய் நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்ளப் போவதில்லை, விரைவில் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தப்போகிறார்.
அதிமுகவினரின் நாடகம்
எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று விலகிச் சென்றவர்கள் கூறுவது, சுயநலத்திற்காகத் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்கான ஒரு நாடகமே தவிர வேறில்லை.
தடம் மாறிச் சென்றவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் ‘தாய் கழகத்திற்கே’ திரும்ப வேண்டும். அதற்காகத் தேவைப்பட்டால், கட்சியின் உயர் தலைமைப் பொறுப்பிடம் பேசவும் தாம் தயாராக இருக்கிறேன்” என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் இந்த பேச்சு, தவெக அரசுக்குக் குடைச்சல் கொடுப்பதாக இருந்தாலும், மறைமுகமாக பலவீனமடைந்து வரும் அதிமுக கட்டமைப்பை முட்டுக் கொடுத்து நிறுத்த முயலும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
