தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படாததைக் கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று முதலமைச்சர் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலையாக ஒளிபரப்பப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதங்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியவுடன் நேரலை உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் விவாதங்களை மக்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுப்பது, ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘மாற்றம்’ என்ற சொல்லை மையமாகக் கொண்டு தேர்தலைச் சந்தித்தவர்கள், தற்போது மக்கள் பிரதிநிதிகளின் குரலை ஒடுக்குவதுதான் அவர்கள் வாக்குறுதியளித்த மாற்றமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்ற உள்ள நிலையில், சபாநாயகர் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாக முழுமையாக நேரலையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
