தமிழகத்தில் குடும்பத் தலைவிகளை மையமாகக் கொண்டு, ஆண்டுக்கு 3 விலையில்லா எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்களுக்கான தொகை மானியமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், தங்களது எரிவாயு இணைப்புடன் eKYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) நடைமுறையை முழுமையாக முடித்திருக்க வேண்டும். eKYC சரிபார்க்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அரசு தரப்பில் சலுகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக பயனாளிகள் தனியாக புதிய அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டியதில்லை. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள Indane, HP Gas, Bharat Gas உள்ளிட்ட எரிவாயு இணைப்புகள் மூலம் தேவையான தகவல்கள் சரிபார்க்கப்படும்.
முதலில், உங்கள் எரிவாயு இணைப்பு செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், eKYC சரிபார்ப்பும் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
eKYC-ஐ எரிவாயு ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் முறையில் புதுப்பித்துக்கொள்ளலாம். கைரேகை அல்லது முக அடையாள சரிபார்ப்பு மூலம் இந்தப் பணியை மேற்கொள்ள முடியும். அதேபோல், சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் மூலமாகவும் Face Authentication வசதியைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே eKYC செய்துகொள்ளும் வசதி உள்ளது.
தகுதியான பயனாளிகள் வழக்கம்போல பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது எரிவாயு ஏஜென்சி மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். சிலிண்டரைப் பெறும்போது அதற்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.
சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட விவரம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர், அந்த சிலிண்டருக்கான தொகை மானியமாக நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் DBT முறையில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதற்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் இலவச சிலிண்டர் கிடைக்கும், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சிறு, குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் உள்ளிட்ட தகுதியான குடும்பங்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்பத் தலைவியின்:
- ஆதார் அட்டை
- தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டை
- எல்பிஜி சிலிண்டர் இணைப்பு புத்தகம்
- எரிவாயு இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கு புத்தகம்
- ஆண்டு வருமானச் சான்றிதழ்
ஆகியவை முக்கிய ஆவணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி உறுப்பினர் உள்ள குடும்பமாக இருந்தால், அதற்கான மாற்றுத்திறனாளி சான்றிதழையும் இணைக்க வேண்டும்.
குடும்ப அட்டையுடன் எல்பிஜி இணைப்பு ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தகுதியான பயனாளிகள் பட்டியலில் தானாகவே சேர்க்கப்படும். ஒருவேளை குடும்ப அட்டையுடன் எல்பிஜி இணைப்பு விவரங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அவற்றை இணைக்குமாறு அறிவுறுத்தப்படலாம்.
அதன்பிறகு, தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சிலிண்டர்களைப் பெறத் தகுதியுடையவர்களா என்பது உறுதி செய்யப்படும்.
தகுதி பெற்றவர்கள் வழக்கம்போல் சிலிண்டரை முன்பதிவு செய்து, முதலில் பணம் செலுத்தி வாங்க வேண்டும். சிலிண்டர் வாங்கியதற்கான ரசீது மற்றும் விநியோக விவரங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு அனுப்பப்படும்.
சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த சிலிண்டருக்கான தொகை தமிழக அரசால் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் குடும்பங்கள் தங்களது ஆதார்–எல்பிஜி இணைப்பு, eKYC, குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
