“அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் சூழல் உருவாகி வருகிறது” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் போட்டுடைத்த அந்த ஒரு வார்த்தை, இப்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.
வெளியில் இருந்து ஆதரவு என்று போக்கு காட்டிவிட்டு, உள்ளுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் பகிர்வு டீலிங்கின் பின்னணியில் இருக்கும் “மாஸ்டர் பிளான்” இப்போது வெளியாகி இருக்கிறது.
ஓசூர் டூ கோட்டை ரகசியம்
பத்திரிகையாளர் சந்திப்பில் வீரபாண்டியன் சாதாரணமாகப் பேசவில்லை. மிகத் துல்லியமான கணக்குடன்தான் பேசியிருக்கிறார். “ஓசூர் மண்ணில் இருந்து ஒரு புதிய அமைச்சர் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டபோதே அரசியல் நோக்கர்கள் சுதாரித்துக் கொண்டனர்.
ஒருபக்கம் இடைத்தேர்தல் கூட்டணி குறித்து “பிறகு முடிவெடுப்போம்” என்று மழுப்பினாலும், இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சி தவெக அமைச்சரவையில் களம் காணப் போகிறது என்பதை வீரபாண்டியன் மிக வெளிப்படையாகவே போட்டுடைத்துவிட்டார். இதன் பின்னணியில் தலைமை செயலகத்தில் அரங்கேறிய ரகசியப் பேச்சுவார்த்தைகள் தற்போதைய பரபரப்புக்கு அச்சாரமிட்டுள்ளன.

சிபிஐ-யின் யூ-டர்ன்
தொடக்கத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்தபோதே, “நீங்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்” என்று தவெக தரப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. ஆனால், “அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம், கொள்கை ரீதியாக வெளியில் இருந்தே ஆதரவு தருகிறோம்” என்று அப்போது சிபிஐ பந்தா காட்டியது.
ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. தவெக தலைமை என்னென்ன வழிகளில் கம்யூனிஸ்ட் கட்சியை வளைக்க வேண்டுமோ, அத்தனையையும் பக்காவாகச் செய்து முடித்துள்ளது. தவெக விரித்த வலையில் சிபிஐ இப்போது முழுமையாக விழுந்துவிட்டதையே வீரபாண்டியனின் பேச்சு காட்டுகிறது.
விஜய்யின் அசுர கணக்கு
இந்த டீலிங்கில் சாதாரணமாக ஏதோ ஒரு ஒப்புச்சப்பான அமைச்சர் பதவியைக் கொடுத்து கம்யூனிஸ்டுகளைத் திருப்திப்படுத்த தவெக தலைமை விரும்பவில்லை. எதிர்காலத்தில் தவெக அரசுக்கு வரக்கூடிய மிகப்பெரிய தலைவலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு “பவர்புல்” துறையை ஒதுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை
இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்கு அசுரத்தனமானது. இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டிப் போராடுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மை வேலை. இப்போது அதே கம்யூனிஸ்டுகளின் கையில் தொழிலாளர் நலத்துறையை ஒப்படைத்துவிட்டால் என்ன நடக்கும்?

தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தால், கம்யூனிஸ்ட் அமைச்சரை வைத்தே அந்தப் போராட்டங்களை மிக எளிதாக ‘காம்ப்ரமைஸ்’ செய்து, சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம். தொழிலாளர் அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகளே அதிகாரத்தில் அமரும்போது, தொழில்துறை அமைதி காக்கப்படும். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெரிய நிம்மதியைத் தரும்.
தவெக-வின் சாணக்கியத்தனம் வெல்லுமா?
முதலாளித்துவ எதிர்ப்புப் பேசும் இடதுசாரிகளை, அதே முதலாளிகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் தவெக-வின் இந்த சாணக்கியத்தனம் கோட்டை வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய கம்யூனிஸ்டுகள், இப்போது தவெக விரித்த வலைக்குள் ‘அமைச்சர்’ ஆசைக்காகத் தஞ்சம் புகுந்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கிறார்கள். ஓசூர் மண்ணில் இருந்து உதயமாகப் போகும் அந்தப் புதிய அமைச்சர் தளி ராமச்சந்திரன்.
