தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
“இந்த திருட்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் கொள்ளை காரணமாகவே பலர் தற்போது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடி வருகிறார்கள். கரூரைச் சேர்ந்த ஒரு நிறுவன உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இன்னொருவர் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இன்னும் விசாரணை ஆழமாகச் சென்றால், எத்தனை பேர் இதில் சிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை” என்று கூறினார்.
“உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், ‘எங்களால் லஞ்சம் கொடுக்க முடியாது’ என்று தைரியமாகச் சொல்லுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களை கட்டாயப்படுத்தினாலும், ‘இது எங்கள் மகன், எங்கள் பிள்ளை, எங்கள் அண்ணன், எங்கள் தம்பி, எங்கள் விஜய்… இது விஜயின் ஆட்சி’ என்று உறுதியாகச் சொல்லுங்கள்” என்றார்.
மேலும், “மக்கள் நம்முடன் இருக்கும்போது, லஞ்சம் மற்றும் ஊழல் மட்டுமல்ல; அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆட்டம் போட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அடங்கி நடக்க வேண்டிய நிலை உருவாகும்” என்றும் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கைகளை முன்னிறுத்திய கட்சிகள் இன்று எந்த நிலையில் உள்ளன என்பது மக்களுக்கே தெரியும் என்றும் அவர் விமர்சித்தார்.
அரசியல் எதிர்ப்புகள் குறித்துப் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை எதிர்ப்பதில் அவர்களுக்கு ஒரு அரசியல் காரணம் இருக்கிறது. ஏனெனில், ஊழலும் லஞ்சமும் இல்லாத அரசியலை நான் பேசுவதால், அவர்களின் அரசியல் நடைமுறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னை நம்பத் தொடங்கியிருப்பதால் என்னை எதிர்க்கிறார்கள். அந்த அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.
மேலும், “ஆனால், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்து, மக்களுக்காகப் பணியாற்றும் பொறுப்பை வழங்கிய பிறகும், இன்னும் பழைய ஆட்சியே தொடர்கிறது என்ற மனநிலையுடன் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. விஜய் கரூருக்கு வரக்கூடாது, இங்கு செல்லக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என்று தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை” என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர், “ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்ற பல கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் விதித்தீர்கள். இப்போதும் அதே மனநிலையுடன் செயல்பட்டால் அது நியாயமல்ல. இன்னும் கனவு உலகிலேயே இருக்காமல், உண்மை நிலைக்கு வாருங்கள். உங்கள் ஆட்சி முடிந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன” என்று விஜய் தெரிவித்தார்.
