தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே அதிருப்திப் புகைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, “மதச்சார்பற்ற அரசை நிறுவுவதே நோக்கம்” என்று கூறி ஆதரவு கோரிய தவெக-விற்கு, ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆதரவு அளித்ததாக விசிக அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான மாநிலப் பாடலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ அறிவிக்கப்பட்டு, அனைத்து அரசு விழாக்களிலும் அதுவே முதன்மையாக ஒலிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “தமிழகத்தில் மதச்சார்ப்பற்ற அரசை நிறுவுவதே எங்கள் நோக்கம் என கூறி எங்கள் ஆதரவை கோரியது தவெக. அதன் அடிப்படையிலும், ஜனாதிபதி ஆட்சியோ, மறுதேர்தலோ வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தவெக அரசு அமைவதை ஆதரித்தோம். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என முந்தைய திமுக அரசு அறிவித்தது. முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை அதிகாரிகளே முடிவுசெய்தார்களா? முதல்வர் விஜய் கவனத்திற்கு வந்ததா? உரிய விளக்கம் தேவை” எனக் கேட்டுள்ளார்.
விஜய் தலைமையிலான அரசுக்கு விசிக ஆதரவு அளித்திருந்தாலும், அது நிபந்தனையற்ற ஆதரவு அல்ல என்பதைத் திருமாவளவன் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே தவெக-வை ஆதரித்ததாகக் கூறுவதன் மூலம், தங்களுக்கு மாற்று வழிகள் உண்டு என்பதை விசிக சூசகமாக உணர்த்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதன் மூலம், கொள்கை ரீதியாகத் தாங்கள் இன்னும் சமரசமாகவில்லை என்பதையும் விசிக காட்டியுள்ளது.
