சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டு ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, நாடு முழுவதும் மொத்தமாக 88.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் 0.41 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்.
மாணவிகள் 91.52 சதவீதமும், மாணவர்கள் 85.12 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மூன்றாம் பாலின மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மண்டல வாரியாக வெளியிடப்பட்ட முடிவுகளில், திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 97.39 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், பெங்களூரு மண்டலம் 95.95 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
