தமிழக அரசியல் களம் தினமொரு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கி தங்களின் ஆளுமையை நிரூபிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான தவெக ஏற்கனவே அதிமுகவின் முக்கிய விஐபிகளான விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், கரூர் வி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்றவர்கள் தவெக-வை நோக்கி நகரப் போகிறார்கள் என்ற யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுகவுக்குப் பேரிடியாக மதுரையில் உள்ள ஒரு மிகப்பெரிய கோட்டையையே ஒட்டுமொத்தமாகச் சாய்க்க தவெக மெகா பிளான் ஒன்றை அரங்கேற்றி வருகிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மதுரையில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக கோலோச்சி வரும் ஆளுமை, தன் ஊர்ப் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் அடையாளமாகக் கொண்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ‘செல்லூர்’ கே.ராஜூ விரைவில் தவெக-வில் இணைய முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.
இருப்பினும், இந்த மெகா இணைப்பிற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான நிபந்தனையும் உள்ளது. செல்லூர் ராஜூ அவர்கள் பனையூர் தலைமையகத்திற்கு வந்து சாதாரணமாகக் காத்திருந்து கட்சியில் இணைய விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அவர்களை நேரடியாகச் சந்தித்து, கௌரவமான முறையில் தவெக-வின் துண்டைப் போர்த்திக் கொள்ள வேண்டும் என்ற ஒற்றை நிபந்தனையோடு அவர் காத்திருக்கிறார்.
இந்த நேரடிச் சந்திப்பு மட்டும் உறுதியானால், மதுரையில் உள்ள ஒட்டுமொத்த அதிமுக கூடாரத்தையும், அதன் அடிமட்டத் தொண்டர் படையையும் அப்படியே தவெக-வின் பக்கம் நகர்த்தித் தருவதாக விஜய் அவர்களிடம் அவர் மிக வலுவான உத்தரவாதத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவை முழுமையாகப் பலவீனப்படுத்தி, தவெக-வின் ஆதிக்கத்தை நிலைநாட்டப் பனையூர் போடும் இந்த ஸ்கெட்ச் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் ‘கோட்டை’ என வர்ணிக்கப்படும் ஒரு சீனியர் தலைவர் தவெக-வில் இணையவிருக்கும் இந்த அதிரடி ஆக்ஷன், ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போகிறது என்பது மட்டும் உறுதி.
