சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து, அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இன்று (ஜூலை 18, 2026) சென்னையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் போக்குவரத்து மிகுந்த முக்கிய பகுதிகளான புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காரணமாக, பல சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தப் போராட்டத்தை திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் தீபக் நாதன் தலைமையில் ஒருங்கிணைத்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு, நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரை கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தப் போராட்டத்திற்குக் காரணமான சபரிவர்மன் மரண விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல்துறையினரால் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன், கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி சிறையிலேயே உயிரிழந்தார்.
அவரது உடற்கூறாய்வு அறிக்கையில், உடல் முழுவதும் மொத்தம் 19 காயங்கள் இருந்ததாகவும், அவரது கைகள் முறிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சிறையில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இந்த மரணம் காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழ்ந்த மரணம் (Custodial Death) என விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, பின்னர் காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் முதன்மை வார்டன் என். சுரேஷ் உள்ளிட்ட மூன்று சிறைத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட எட்டு கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, அந்த எட்டு கைதிகள் சிறைக் காவலர்களுடன் இணைந்து கொடூரமாக தாக்கியதாக காவல்துறையினர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்திருந்தாலும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வரை அந்த நிவாரணத் தொகையை ஏற்க மாட்டோம் என்றும், உடலையும் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சபரிவர்மனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு கடந்த மூன்று நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் கேள்விகளையும் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வசமே உள்துறைத் துறை பொறுப்பு உள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்று 60 நாட்களுக்குள் தமிழகத்தில் நான்கு லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், லாக்-அப் மரணங்களுக்கு எதிராக குரல் கொடுத்த தற்போதைய முதலமைச்சர் விஜய், சபரிவர்மன் மரண விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தவெக நிர்வாகி ஒருவர் குட்கா வழக்கில் ஈரோடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதே குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தது ஏன் என்றும், இது அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடும் அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
சபரிவர்மன் மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
