https://republictn.com/

தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியைப் பலவீனப்படுத்தவும், கவிழ்க்கவும் திரைமறைவில் அரங்கேறிய குதிரை பேர விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆளும் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களையே மிரட்டி, விலைக்கு வாங்க முயன்ற இந்த சதித் திட்டம் எவ்வளவு ஆழமாகத் தீட்டப்பட்டுள்ளது என்பது குறித்த அடுக்கடுக்கான புலனாய்வுத் தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திமுக தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சிக்கிய ஆதாரங்கள்
இந்த குதிரை பேர சதி குறித்துப் பேசியுள்ள அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசிடம் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். “பல எம்.எல்.ஏ-க்களுடன் ஆதாரத்துடன் 35 கோடி ரூபாய் பேரம் பேசிய விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. இந்தத் தகவல்கள் மற்றும் சான்றுகள் அனைத்தும் ஆதாரத்துடன் காவல்துறைக்கு வந்ததால்தான், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் காவல்துறை எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, தெளிவான சான்றுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் -உதயநிதி மீது நேரடித் தாக்குதல்
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் மிக முக்கியத் தலைவர்கள் இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “இதற்கு மேல் ஒரு கேவலமான விஷயத்தை திமுக சார்பாக அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்ய முடியாது” என அவர் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை மிரட்டி ஜனநாயகப் படுகொலை செய்யத் துணியும் திமுகவின் இந்த உத்தி அரசியல் ரீதியாக மிகவும் கீழ்த்தரமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜி நெட்வொர்க்
காவல்துறை நடத்தி வரும் விசாரணையில், இந்த பேர விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவருடைய தம்பியும், அவர்களுடன் இருக்கும் நபர்களும் இந்த சதித் திட்டத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். கரூரில் அசோக் குமார் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு, விசாரணைகள் இந்த நெட்வொர்க்கை நோக்கியே நகர்வதை அவரது பேச்சு உறுதி செய்கிறது.

“தப்ப முடியாது… அடுத்தடுத்து கைது பாயும்!”
தவெக அரசை அசைத்துப் பார்க்க நினைத்த இந்தச் சதியில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என அமைச்சர் எச்சரித்துள்ளார். “காவல்துறை தங்களது விசாரணையை மிகவும் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டே வருகிறார்கள். அடுத்தடுத்த கட்டங்களில் இந்தச் சதியில் தொடர்புடைய யார் யார் கைது செய்யப்படுவார்களோ, அதனை காவல்துறையினரே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பார்கள். இது போன்ற ஒரு மோசமான குற்றத்தை செய்தவர்கள் எந்தக் காலத்திலும் சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்” என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் இந்த அதிரடிப் பேட்டி, திமுக மற்றும் செந்தில் பாலாஜி தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 35 கோடி ரூபாய் பேரத்திற்கான டிஜிட்டல் மற்றும் ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் காவல்துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுவதால், இந்த வழக்கில் இன்னும் சில தினங்களில் திமுகவின் முக்கியப் புள்ளிகள், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago