https://republictn.com/

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை பலர் உண்மை என நம்பிவிடும் சூழல் நிலவுகிறது. அந்த வகையில், 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் செல்லாது என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரப்போகிறது என்றும் வதந்திகள் பரவின.

ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை அடிப்படையற்ற வதந்திகள் என்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்காது என்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இத்தகைய ஆதாரமற்ற தகவல்களை நம்பவோ, பிறருக்கு பகிரவோ வேண்டாம் என்றும், நிதி தொடர்பான தகவல்களுக்கு வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையில், இந்திய ரிசர்வ் வங்கி பழைய 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை செல்லாது என எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட மகாத்மா காந்தி தொடரின் ரூபாய் நோட்டுகளை விருப்பமுள்ளவர்கள் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நோட்டுகளாக வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று மட்டுமே கூறப்பட்டது.

புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய வடிவமைப்பிலான 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இன்றும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். அவற்றை வங்கிகளோ, வணிக நிறுவனங்களோ அல்லது பொதுமக்களோ ஏற்க மறுக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை யாரேனும் வாங்க மறுத்தால், அதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் பழைய மற்றும் அழுக்கடைந்த நோட்டுகளைப் பெற்று, புதிய நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது வழக்கமான நிர்வாக நடைமுறையே தவிர, பழைய நோட்டுகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்களிடம் உள்ள பழைய 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வழக்கம்போல எந்த தயக்கமும் இன்றி பணப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தலாம். எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திய பிறகே பகிர்வது அவசியம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago