https://republictn.com/

நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் (NEET) தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றபோது வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேர்வில் மீண்டும் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை ஒரு வார காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த தேர்வின்போது வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. விசாரணையில், இந்த செயலிகள் மூலமாகவே வினாத்தாள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-ன் கீழ் உள்ள அவசரகால விதிகளின்படி, இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வு முடியும் வரை அமலில் இருக்கும் என்றும், அதற்கு முன் தடையை மீறி செயலியை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA), போலி வினாத்தாள்கள் பரவல் மற்றும் சமூக வலைதளங்களில் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்த முடியாத சூழலில், தேர்வு பாதுகாப்பை உறுதி செய்ய இந்த கடுமையான நடவடிக்கை அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், நாடு முழுவதும் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சில இணையத் தேவைகளுக்கு தற்காலிக இடையூறு ஏற்பட்டாலும், தேர்வு நியாயத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago