https://republictn.com/

கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை நம்பிச் சென்ற குடும்பத்தின் கார் ஆழமான சாக்கடை கால்வாயில் விழுந்து, காருக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் சுமார் இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டாவின் தத்ரி பகுதியைச் சேர்ந்த சாஹில் என்பவர், தனது குடும்பத்தினருடன் மீரட்டில் நடைபெற்ற உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டார். காரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர்.

அவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் மேம்பாலச் சாலை பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்ததால், மாற்று வழியைக் கண்டறிய கூகுள் மேப் செயலியை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, கூகுள் மேப் காட்டிய குறுகலான குறுக்கு வழியை நம்பி அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இரவு நேரமாக இருந்ததுடன், அப்பகுதியில் மழைநீர் தேங்கி இருந்ததால், முன்னால் இருந்த ஆழமான சாக்கடை கால்வாயை டிரைவர் கவனிக்க முடியவில்லை. இதன் காரணமாக கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் சரிந்து விழுந்தது.

கார் விழுந்த பகுதி சேறும் சகதியுமாக இருந்ததுடன், நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால், காருக்குள் இருந்தவர்களால் கதவுகளை திறக்க முடியவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் காருக்குள் சிக்கிக் கொண்டு, மூச்சுவிட கூட சிரமப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், காருக்குள் இருந்த ஒருவர் சாதுரியமாக அவசர உதவி எண் 112-க்கு தொடர்புகொண்டு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும், காரின் கதவுகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இருசக்கர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான பாதையை கூகுள் மேப் மாற்று வழியாக காட்டியதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் காருக்குள் இருந்த அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர்.

முன்பின் அறிமுகம் இல்லாத கிராமப்புற சாலைகள் அல்லது மலைப்பாதைகளில் பயணம் செய்யும் போது, கூகுள் மேப்பை மட்டுமே முழுமையாக நம்பாமல், உள்ளூர் மக்களிடம் வழியை உறுதி செய்து கொண்டு பயணிப்பதே பாதுகாப்பானது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago