முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் கடந்த 14.11.2022 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவது பொருட்டு இன்று முதல் செல்போன் தடை விதிமுறைகள் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொது தரிசன வரிசை, நூறு ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் நவீன மிஷின் மூலம் கோவிலுக்குள் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்கள்.
அந்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் தடையையும் மீறி உத்தரவையும் மீறி கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றாள் பறிமுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
