Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த 2008-ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, குளித்தலை அருகே மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்து தொடர்பான வழக்கு, குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மஞ்சுளா மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டிய பாக்கித் தொகையான ரூ.29 ஆயிரத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தாமல் காலதாமதம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காததைத் தொடர்ந்து, அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, நீதிமன்ற அமீனா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குளித்தலை பேருந்து நிலையத்திற்குச் சென்று, ஜூன் 30, 2026 அன்று மதியம் திருச்சியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை பயணிகளை இறக்கிய பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி முறைப்படி ஜப்தி செய்தனர்.

பின்னர், ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து நீதிமன்றம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டது.

வெறும் ரூ.29 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையைக் கூட வழங்காமல் இழுத்தடித்ததால், அரசுப் பேருந்தே ஜப்தி செய்யப்பட்ட இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago