தமிழக அரசியல் களம் தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவிலிருந்து விலகி, “இது நம்ம இயக்கம்” என்ற பெயரில் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது இயக்கத்தை வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போன்று திட்டமிட்டு கட்டமைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அரசியலில் பதவி பெறுவதற்கு பரிந்துரைகளோ அல்லது பணமோ தேவையில்லை; அதற்கான தகுதியே அடிப்படை என்ற புதிய அரசியல் கலாச்சாரத்தை அவர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலையின் “வீத லீடர்ஸ்” இணையதளத்தின் மூலம் தொடங்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை இயக்கம், வெறும் ஒரு வார காலத்திலேயே சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிமிடத்திற்கு 35 பேர் என்ற வேகத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வருவது, அரசியல் விமர்சகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இவ்வளவு பெரிய உறுப்பினர் கூட்டத்தை ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் இயக்கமாக மாற்றும் போது, நிர்வாகிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்காக அண்ணாமலை ஒரு புதிய மற்றும் வித்தியாசமான திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக அரசியல் கட்சிகளில் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் அல்லது கிளை செயலாளர் போன்ற பதவிகள் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் அண்ணாமலையின் இயக்கத்தில், கிளை மட்டம் முதல் மாநில மட்டம் வரையிலான எந்தப் பதவியையும் பெற வேண்டுமானாலும், அதற்கென நடத்தப்படும் சிறப்பு பயிற்சிகளையும் தகுதித் தேர்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கோவையில் “அப்துல் கலாம் ஒழுக்கநெறி மற்றும் அரசியல் மையம்” என்ற பெயரில் ஒரு நவீன பயிற்சி மையத்தை அமைக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மையத்தின் மூலம் தலைமைத்துவ பண்புகள், மக்கள் தொடர்பு திறன், தேர்தல் மேலாண்மை, கொள்கை விளக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ் பெறுபவர்களுக்கு மட்டுமே கட்சி பொறுப்புகள் வழங்கப்படும் என்ற நடைமுறை, தமிழக அரசியலில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் அனுபவத்தை விட திறமை, ஒழுக்கம் மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திட்டம், குறிப்பாக படித்த இளைஞர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களை அரசியலுக்கு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் இளைஞர் சக்தியை திரட்டி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த தகுதி அடிப்படையிலான அரசியல் முன்னெடுப்பு தமிழக அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் திராவிடக் கட்சிகளுக்கு எவ்வளவு சவாலாக அமையும் என்பது எதிர்காலத்தில் தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
