https://republictn.com/

காதலிக்காக எல்லை தாண்டி இந்தியா வந்த பாகிஸ்தான் இளைஞர்… தீவிர விசாரணைக்குப் பிறகு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்

சமூக வலைத்தளத்தில் மலர்ந்த காதலுக்காக இந்திய எல்லையை சட்டவிரோதமாகக் கடந்த பாகிஸ்தான் இளைஞரை, பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர விசாரணை, நீதிமன்ற உத்தரவு மற்றும் மனிதாபிமான அணுகுமுறைக்குப் பிறகு, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஜீஷான் அகமது மிர், ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள திலாவாரி கிராமத்தைச் சேர்ந்த இரம் பானோ என்ற இளம்பெண்ணுடன் ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி, பின்னர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தனது காதலியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், கடந்த மே 31, 2026 அன்று உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) சட்டவிரோதமாகக் கடந்து ஜீஷான் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

எல்லையைக் கடந்த உடனே இந்திய ராணுவத்தினர் அவரைக் கைது செய்து, தீவிரவாத தொடர்பு அல்லது வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளனவா என்பதை அறிய விரிவான விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், ஜீஷான் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல், தனது காதலியைச் சந்திக்கும் நோக்கில் மட்டுமே இந்தியாவுக்குள் வந்தது உறுதியானது. இதையடுத்து, அவர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், அவரது பின்னணி மற்றும் வழக்கின் தன்மையை ஆய்வு செய்த உரி நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து ஜீஷானை அவரது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, “கடைசியாக ஒருமுறை காதலியைச் சந்திக்க வேண்டும்” என்று ஜீஷான் அதிகாரிகளிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் இந்திய அதிகாரிகள், கமன் போஸ்ட் பகுதியில் அவரது காதலி இரம் பானோ மற்றும் அவரது தாயாரை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கினர்.

வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்தச் சந்திப்பில், இருவரும் கண்ணீர் மல்க ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டனர். அந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அதிகாரிகளையும் உருக்கியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 4, 2026 அன்று மதியம் 12.24 மணியளவில், எல்லைப் பகுதியான கமன் போஸ்ட் ‘அமன் சேது’ பாலத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் ஜீஷானை பாகிஸ்தான் ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

இந்தியாவில் இருந்த காலம் முழுவதும் ஜீஷான் கண்ணியத்துடனும், மனிதாபிமான அணுகுமுறையுடனும் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

ஜீஷான் மற்றும் இரம் பானோ இருவரும் முற்றிலும் அந்நியர்கள் அல்ல. இரு குடும்பங்களுக்கும் ஏற்கனவே தூரத்து உறவுமுறை இருந்ததாகவும், கடந்த ஓராண்டாக ஸ்னாப்சாட் செயலி வாயிலாக தொடர்ந்து பேசியதன் மூலம் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

உரி செக்டாரில் உள்ள திலாவாரி கிராமம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகிலும், இந்திய பாதுகாப்பு வேலிக்கு வெளியேயும் அமைந்துள்ளது. அங்குள்ள கரடுமுரடான மலைப்பாதைகள் மற்றும் கடும் நீரோட்டம் கொண்ட காட்டாற்றைக் கடந்து ஜீஷான் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜீஷான் ஒப்படைக்கப்பட்ட கமன் போஸ்ட் பாலம், ‘அமன் சேது’ என அழைக்கப்படுகிறது. காஷ்மீர் பிரிவினையால் பிரிந்த இரு நாடுகளின் குடும்பங்கள் சந்தித்து உறவுகளைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இந்தப் பாலம் விளங்குகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago