https://republictn.com/

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு தனிப்பட்ட முறையில் காப்புரிமை கோரவோ, உரிமம் வழங்கவோ முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், இசை நிறுவனமான சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையிலான காப்புரிமை மோதல் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

1976 முதல் 2001 வரை வெளியான 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமையை, அந்தந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களின் அடிப்படையில் தாங்கள் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

இந்த நிலையில், அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் அந்தப் பாடல்களை வெளியிட்டதோடு, 2026 ஜனவரி மாதத்தில் அவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் காப்புரிமை கோரி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, சரிகம நிறுவனம் அவருக்கு எதிராக காப்புரிமை வழக்கைத் தொடர்ந்தது.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த மனுவை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காப்புரிமைச் சட்டம், 1957-இன் படி, ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளர் பணம் வழங்கி இசையமைப்பாளரை நியமித்து உருவாக்கப்படும் இசைப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார்.

தயாரிப்பாளர்களிடமிருந்து உரிமம் பெற்றிருப்பதால், தற்போதைய நிலையில் சரிகம நிறுவனத்தின் வாதத்திற்கே சட்டரீதியாக முன்னுரிமை இருப்பதாக நீதிபதி துஷார் ராவ் கெடேலா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் கீழ், இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், நெற்றிக்கண், ராஜ பார்வை, பாரதி உள்ளிட்ட பல எக்காலத்தும் புகழ்பெற்ற திரைப்படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே, “என்னையே போல் நிலாவே” பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கிலும் சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பும் இந்த வழக்கில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமையை தனிப்பட்ட முறையில் இளையராஜா கோர முடியாது என்பதே டெல்லி உயர்நீதிமன்றத்தின் தற்போதைய இடைக்கால நிலைப்பாடாகும்.

இந்தப் பாடல்களுக்கு தனியாக உரிமம் வழங்கவோ, காப்புரிமை கோரி நடவடிக்கை எடுக்கவோ தற்போதைய நிலையில் அவருக்கு உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே நேரத்தில், இளையராஜாவின் “தனித்துவ உரிமை” (Personality Rights) தொடர்பான பிற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவை இந்த வழக்கிலிருந்து தனித்துவமான சட்டப் பிரச்சினைகளாக தொடர்ந்து விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago