ஈரானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் தெஹ்ரான், வாஷிங்டன் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல், கடற்படை அழிப்பான் கப்பல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.
ஈரானியக் கப்பல்களைத் துன்புறுத்தியதாலும், கடல்வழி முற்றுகையில் பங்கேற்றதாலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கூறியுள்ளது. ஏவுகணைத் தாக்குதலால் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சேதமடைந்ததாகவும், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் அவை அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் தஸ்னிம் செய்தி நிறுவனம் வழியாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பரஸ்பரத் தாக்குதல்கள் – எச்சரிக்கைகள்
ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று டேங்கர் கப்பல்கள், அமெரிக்காவுடன் தொடர்புடைய வேறு மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானிய கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டால், இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை எச்சரித்துள்ளது. “அமெரிக்கா தனது விரோத மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், இஸ்லாமிய குடியரசு ஈரானின் ஆயுதப்படைகளிடமிருந்து கடுமையான பதிலடியை அமெரிக்க நிர்வாகம் எதிர்பார்க்க வேண்டும். நாங்கள் முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறோம்” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலாக அவர்களின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் கப்பல் தொகுதி மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
அமெரிக்காவின் விளக்கம்
அதேவேளையில், தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அழிப்பான் கப்பல் ஆகியவை ஈரானின் தாக்குதல்களிலிருந்து தப்பியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அமெரிக்கப் பணியாளர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகவும், தேவைப்பட்டால் ஈரானின் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள எண்ணெய் கப்பல் தொகுதியைத் தாக்குவதாகவும் அட்மிரல் கூப்பர் எச்சரித்தார்.
