இந்தியாவின் முதல் புல்லட் ரயில் தொடர்பான ‘ஃபர்ஸ்ட் லுக்’ புகைப்படத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நவீன வசதிகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், இந்தியாவின் அதிவேக ரயில் சேவைக்கான புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ள இந்த புல்லட் ரயில் சேவையின் மூலம், தற்போதைய சுமார் 7 மணி நேர பயண நேரம் சுமார் 2 மணி நேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயிலாக இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 508.17 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த ரயில் பாதை, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய மூன்று பகுதிகளைக் இணைக்கிறது. இதில் மகாராஷ்டிராவில் 155.76 கிலோமீட்டரும், குஜராத்தில் 384.04 கிலோமீட்டரும், தாத்ரா-நகர் ஹவேலியில் 4.3 கிலோமீட்டரும் இடம்பெறுகின்றன.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அவை குஜராத்தில் 8 நிலையங்களும், மகாராஷ்டிராவில் 4 நிலையங்களும் ஆகும். முக்கியமாக மும்பை, தானே, விரார், பொய்சார், வாபி உள்ளிட்ட பகுதிகள் இதில் இடம்பெறுகின்றன.
இந்த திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, மொத்த பாதையில் 21 கிலோமீட்டர் சுரங்கப்பாதையும், அதில் 7 கிலோமீட்டர் கடலுக்கு அடியில் செல்லும் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக கடலுக்கு அடியில் ரயில் பயணிக்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள இந்த புல்லட் ரயில், விமானக் கட்டணத்திற்கு இணையான அல்லது பிரீமியம் ரயில் சேவைக்கான கட்டணத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் அதிவேக ரயில் சேவைக்கான இந்த திட்டம், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
