மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் எரிபொருள் பதுக்கலைத் தடுப்பதற்காக, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் (மோட்டார் ஸ்பிரிட்) விற்பனைக்கு அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போது மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் பதுக்கலைத் தடுக்கவும் அரசு ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது.
வணிக நிறுவனங்களுக்குத் தடை
புதிய உத்தரவின்படி, பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியிலான வாடிக்கையாளர்கள் இனி பொதுமக்களுக்கான சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களில் (Petrol Bunks) இருந்து நேரடியாக பெட்ரோல் மற்றும் அதிவேக டீசலை (High-Speed Diesel) வாங்க முடியாது. அவர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை, அதற்குரிய பிரத்யேக ‘நுகர்வோர் பம்புகள்’ (Bulk Consumer Pumps) மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
200 லிட்டர் மட்டுமே வரம்பு!
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதன்படி சில்லறை விற்பனை நிலையங்கள் ஒரு வாடிக்கையாளருக்கோ அல்லது ஒரு வாகனத்திற்கோ ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் அதிவேக டீசலை விற்கக் கூடாது. பங்குகளில் இருந்து வாங்கும் டீசலை, வெளிச்சந்தையில் மீண்டும் விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிவேக டீசல் என்றால் என்ன?
பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு தரமான டீசல் எரிபொருளையே ‘அதிவேக டீசல்’ என்கிறோம். இது பெட்ரோலியத்தில் இருந்து சுத்திகரித்து தயாரிக்கப்படுகிறது.
கார், பேருந்துகள் மற்றும் கனரக வர்த்தக லாரிகளை இயக்கப் பயன்படுகிறது. கட்டுமான உபகரணங்கள், சாலைப் பணி இயந்திரங்கள் மற்றும் விவசாய டிராக்டர்களில் இது பெரிதும் உதவுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களில் மின் தடையைச் சமாளிக்கப் பயன்படும் டீசல் மின்னாக்கிகள் (Generators) மற்றும் வாயு விசையாழிகளில் (Gas Turbines) இது முதன்மை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய நெருக்கடியான இந்தச் சூழலில், எரிபொருள் வீணாவதைத் தடுக்கவும், சாமானிய மக்களுக்குத் தடையின்றி பெட்ரோல், டீசல் கிடைக்கவும் அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s
