பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானதை அடுத்து பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
அதன்படி கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படுபவர் மகான் ஸ்ரீநாராயண குரு. இவரை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அச்சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 12-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை வெள்ளிக்கிழமை வருவதால் அதற்கு மறுநாள் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குஷியில் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
