இந்திய திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பதவியை அலங்கரித்த வரலாற்றுச் சாதனையாளர்களாக எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் என்.டி. ராமாராவ் (என்.டி.ஆர்) திகழ்கின்றனர்.
அதேபோல், நடிகர் விஜயும் அரசியலில் தீவிரமாக களமிறங்கி, அந்த வரிசையில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்)
தி.மு.க.வில் முன்னணி பிரச்சாரகராக விளங்கிய எம்.ஜி.ஆர், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க.) தொடங்கினார்.
கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில், 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார். திரைப்படங்களில் ஏழை, எளிய மக்களின் பாதுகாவலராக நடித்ததன் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்ற அவர், சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் மூலம் நீடித்த மக்கள் செல்வாக்கை உருவாக்கினார்.
என்.டி. ராமாராவ் (என்.டி.ஆர்)
தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய என்.டி. ராமாராவ், 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை (TDP) தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒன்பது மாதங்களிலேயே, பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, 1983ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று இந்திய அரசியலில் புதிய வரலாறு படைத்தார்.
தனது ‘சைதன்ய ரதம்’ பிரச்சார வாகனத்தில் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு, தெலுங்கு மக்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை முன்னிறுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றார்.
சி. ஜோசப் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், மக்களுக்கு முழுமையாகச் சேவை செய்வதற்காக அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தனது உச்சக்கட்ட திரைப்பட வாழ்க்கையிலிருந்து விலகி, மக்கள் நலன் மற்றும் தூய்மையான அரசியலை முன்னிறுத்துவதாக அறிவித்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு, விஜயின் அரசியல் நகர்வுகளும் தமிழக அரசியலில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
