Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தலைவாய்ப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சசிகலா, 32 வயதுடைய அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஆவார்.

அவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

கார்த்தி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்ததுடன், இயற்கை வாழ்வியல் முறையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் கூறப்படுகிறார். கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தனது மனைவிக்கு ஆஸ்துமா, தோல் பாதிப்பு, பல் வலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் நம்பியதால், ஆங்கில மருத்துவ சிகிச்சையைத் தவிர்த்து இயற்கை முறையிலேயே வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, சசிகலாவின் இரண்டாவது கர்ப்ப காலம் முழுவதும் எந்தவித மருத்துவ பரிசோதனையும், மருந்துகளும், மருத்துவமனை சிகிச்சையும் பெறாமல், இயற்கை முறையிலேயே பிரசவம் பார்க்க குடும்பத்தினர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 24ஆம் தேதி சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர்.

குழந்தை பிறந்தாலும், தொப்புள் கொடியை சரியாக அறுப்பது உள்ளிட்ட அடிப்படை மருத்துவ நடைமுறைகள் குறித்த அறிவு இல்லாததால் அவர்கள் திணறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், சசிகலாவுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் அவர் மயக்கமடைந்த நிலையில், முதலில் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடிய நிலையில், கர்ப்பப்பையும் அகற்றப்பட்டதாகவும், சுமார் 30 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் கார்த்தியின் வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது யூடியூப் வீடியோக்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

இதையடுத்து, போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கார்த்தி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்திலும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து, இணையத்தில் கிடைக்கும் தகவல்களை மட்டுமே நம்பி உயிருக்கு ஆபத்தான முடிவுகளை எடுப்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்கள் பல்வேறு திறன்களை கற்றுக்கொள்வதற்கு உதவியாக இருந்தாலும், பிரசவம் போன்ற உயிர் பாதுகாப்பு தொடர்பான மருத்துவச் செயல்முறைகளில் தகுதியான மருத்துவர்களின் ஆலோசனையும் சிகிச்சையும் மட்டுமே உயிரைக் காப்பாற்றும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago