https://republictn.com/

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே சீனாவிற்கு சொந்தமான ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்காவிற்கு இடையே பதற்றம் அதிகரித்ததில் இருந்து ஒரு சீன கப்பல் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது. சீனா, ஈரானின் நண்பராகக் கருதப்படுவதால் இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவிற்கு எதிரான போரின் போதும் சீனா, ஈரானுக்கு ஆதரவாக நின்றது. இந்தத் தாக்குதல் இந்த வார தொடக்கத்தில் நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய கப்பல்களுக்கு உதவ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை அறிவித்த நாளான திங்கட்கிழமையன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சீனக் கப்பல் மீதான முதல் தாக்குதல்
கப்பல்கள், அண்டை நாடுகளைக் குறிவைத்து ஈரான் ஆளில்லா விமானம், ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தபோது, ​​மறுநாள் டிரம்ப் இந்தத் திட்டத்தை நிறுத்தினார். சீன ஊடகமான சைக்சின் இந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டது, இது ஒரு சீன எண்ணெய் கப்பலைக் குறிவைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்று கூறியது.

கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அதன் தளம் எரிந்து கொண்டிருந்ததாக கூறியது. இந்தத் தாக்குதலில் கப்பல் பணியாளர்கள் யாரேனும் காயமடைந்தனரா என்பது உடனடியாகத் தெரியவில்லை. சேதமடைந்த கப்பலை, மார்ஷல் தீவுகள் கொடியை ஏந்திய எண்ணெய் மற்றும் இரசாயன டேங்கர் கப்பல் என கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, ​​அதன் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்தக் கப்பல் அவசர செய்திகளை அனுப்பியிருந்தது.

ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதைகளில் ஒன்று. இது உலகின் எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டு செல்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதில் இருந்து இந்த முக்கிய நீர்வழி தடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கப்பல்களும், சுமார் 20,000 மாலுமிகளும் வளைகுடாவில் சிக்கியுள்ளனர்.

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்
இந்த வாரம் சீனாவில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ​ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இதற்கிடையில், ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மே 7ஆம் தேதி வியாழக்கிழமை ஈரான் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இது.

ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற மூன்று அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் படைகள் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சிறிய படகுகளை ஏவியதாகவும், இதனால் அமெரிக்கப் படைகள் பதிலடி கொடுத்து அவற்றை அழித்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago